உடல், மன ஆரோக்கியத்திற்கு அன்றாட வாழ்வில் யோகா அவசியம்: மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன்
சென்னை
மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் சென்னையிலுள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் இன்று (21/06/2025) நடைபெற்ற 11-வது சர்வதேச யோகா தின விழாவில் கலந்துகொண்டு சுமார் 1000-க்கும் மேற்பட்டோருடன் யோகாசனங்கள் செய்து விழாவைச் சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு யோகா அன்றாட வாழ்வில் அவசியமாகிறது என்றார். யோகா நமது வாழ்வியல் நெறிமுறைகளுடன் ஒன்றியுள்ளது என்றும், யோகாவை தொடர்ந்து செய்துவந்தால் வாழ்வியல் நோய்களிலிருந்து நம்மை காத்துக்கொள்ள முடியும் என்றார். நம் பாரம்பரியக் கலையான யோகா, பிரதமர் நரேந்திர மோடியால் ஐநா சபையில் முன்மொழியப்பட்டு, உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த யோகா தினமானது, இனம், மொழிகள் மற்றும் எல்லைகளைக் கடந்து, உலக மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கின்ற சக்தியாக மாறியுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
இன்று 11-வது சர்வதேச யோகா தினம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் விசாகப்பட்டினத்தில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருடன் ஒரு சாதனை நிகழ்வாக நடைபெற்றது என்று அவர் தெரிவித்தார். மேலும் உலகமெங்கும் 175 நாடுகளில் யோகா தினம் கொண்டாடப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார். இந்திய கலாச்சாரம், உலக ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் ஒரு நிகழ்வாக அரங்கேறுகிறது என்று மேலும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் யோகா குறித்த ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம் எனும் தலைப்பில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியை அமைச்சர் திறந்துவைத்து பார்வையிட்டார்.
சென்னையிலுள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘யோகா சங்கமம்’ நிகழ்ச்சியில் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் செந்தில்வேல், மத்திய மக்கள் தொடர்பத்தின் இயக்குநர் லீலா மீனாட்சி, சென்னை ஆகாஷ்வாணியின் செய்திப் பிரிவு இயக்குநர் காமராஜ், பத்திரிகை தகவல் அலுவலகத்தின் இயக்குநர் அருண்குமார் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு யோகாசனங்களைச் செய்தனர்.