மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறை அமைச்சகத்தின் கண்காணிப்புக் குழு தமிழ்நாடு வருகை – துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்கிறது.
சென்னை
மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வள அமைச்சகத்தின் தேசிய அளவிலான கண்காணிப்புக் குழு தமிழ்நாட்டுக்கு வந்துள்ளது. இக்குழு நாளை முதல் (24.04.2025) மத்திய அரசின் நிதியுதவியுடன் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் பால்வளத் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறது. ராஷ்டிரிய கோகுல் மிஷன் தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் கால்நடை மேம்பாட்டுக்கான திட்டங்கள் குறித்து இக் குழுவினர் ஆய்வு செய்கின்றனர். செயற்கை கருத்தரித்தல் மற்றும் கருமாற்ற ஆய்வகங்கள் தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரின் மத்திகிரி உள்ள கால்நடைப் பண்ணையில் அவர்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
செம்மறியாடு, வெள்ளாடு, கோழி இனங்கள் மேம்பாடு, பசுந்தீவன அபிவிருத்தி ஆகியவற்றை உள்ளடக்கிய தேசிய கால்நடை இயக்கத்தின் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் 50 சதவீத மானியத்துடன் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் குறித்தும் குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர்.
கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில் உணவு, பால், மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் போன்றவையும் கறிக்கோழி வளர்ப்புக்கு 3 சதவீத வட்டியில் வங்கிக் கடன் உதவியும் வழங்கப்படுகிறது.
245 நடமாடும் கால்நடை மருத்துவப் பிரிவு 2024 ஆகஸ்ட் முதல் களப்பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகிறது.
தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்கள் தொடர்பாகவும் இக்குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.
புள்ளியியல் இயக்குநர் திரு.வி.பி.சிங் தலைமையிலான தேசிய உயர்நிலை கண்காணிப்புக் குழு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் இயக்குநர் அலுவலகத்தில் அதன் இயக்குநர் திரு ஆர்.கண்ணன், தலைமையில் ஆலோசனை கூட்டத்தை நடத்தியது.
இக்கூட்டத்தில் கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் இயக்குநர், கூடுதல் இயக்குநர், இணை இயக்குநர் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவி இயக்குநர், ஆவின் மேலாண்மை இயக்குநர் திரு.அண்ணாதுரை, மத்திய கால்நடைப் பராமரிப்புத் துறை புள்ளியியல் இயக்குநர் திரு.வி.பி.சிங், புள்ளியியல் உதவி இயக்குநர் திரு.எம்.டி.சர்மா, கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தேசிய உயர்நிலை கண்காணிப்புக் குழுவின் மூன்று உறுப்பினர்கள் நாளை (24.04.2025) முதல் வரும் 27.04.2025 வரை நான்கு நாட்கள் கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்குச் சென்று மேற்கண்ட அனைத்து திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்ய உள்ளனர்.