பாதுகாப்பான சிறந்த பயணத்திற்கு வித்திடும் இந்திய இரயில்வே
- ஏ. கே. கண்டேல்வால்,
ஓய்வு பெற்ற உள்கட்டமைப்பு ரயில்வே வாரிய உறுப்பினர், அலுவல்சார் செயலாளர், இந்திய அரசு
கடந்த 10 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க பலன்களை வழங்கிய முயற்சிகளின் காரணமாக முன் எப்போதையும் விட இந்தியர்கள் தற்போது ரயில்களில் பாதுகாப்பாக பயணிக்கிறார்கள். இந்தியாவை விட வேறு எந்த நாட்டிலும் ரயில்கள் மூலம் அதிக மக்கள் பயணிப்பதில்லை என்பதால் இது மேலும் பாராட்டுக்குரியதாக அமைகிறது. ஆண்டுக்கு 1 லட்சம் கோடி பயணிகள் கிலோமீட்டருக்கு சுமார் 685 கோடி பயணிகள் பயணிக்கிறார்கள். அதிக மக்கள்தொகை மற்றும் மேலும் விரிவான ரயில் இணைப்புகளைக் கொண்ட நமது அண்டை நாடான சீனா கூட ஆண்டிற்கு சுமார் 300 கோடி பயணிகளை மட்டுமே ரயில்களில் ஏற்றிச் செல்கிறது.
விரிவான பாதுகாப்பு அம்சங்கள் மூலம் ரயில் விபத்துகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்கிறது. அதிக பாதிப்புக்கு உள்ளாகும் சம்பவங்களை அடையாளம் காண்பதற்கான ஒரு முக்கிய அளவீடான விபத்துகளின் எண்ணிக்கை 2000-01 இல் 473 ஆக இருந்தது, 2023-24 இல் வெறும் 40 ஆகக் குறைந்துள்ளது. தண்டவாளங்களை மேம்படுத்துதல், ஆளில்லா லெவல் கிராசிங்குகளை அகற்றுதல், பாலங்களின் தரத்தைத் தொடர்ந்து கண்காணித்தல் மற்றும் ரயில் நிலையங்களை டிஜிட்டல் மயமாக்குதல் போன்றவற்றில் கவனம் செலுத்தும் முயற்சிகள் மூலம் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
பயணிகள் எண்ணிக்கை மற்றும் வழித்தடங்களின் தூரத்தைக் கருத்தில் கொள்ளும்போது இது போன்ற சாதனைகள் மேலும் ஆச்சரியமளிக்கின்றன. 70 ஆயிரம் வழித்தட கிலோமீட்டர் நீளமுள்ள இணைப்பில், சராசரியாக நாள் ஒன்றுக்கு சுமார் 2 கோடி பேர் பயணம் செய்கின்றனர். குறிப்பிட்ட காலங்களில் இந்த எண்ணிக்கை நாளொன்றுக்கு மூன்று கோடியாக உயர்ந்து, மற்றொரு உலக சாதனையைப் படைக்கிறது!
சீனாவின் 0.58% மற்றும் அமெரிக்காவின் 0.09% உடன் ஒப்பிடும்போது, இந்தியா தனது மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 2% பேரை நாள்தோறும் ரயில்களில் பாதுகாப்பாக ஏற்றிச் செல்கிறது என்பதே இதன் பொருளாகும். இந்திய ரயில்வேயைப் பொறுத்தவரை பயணிகளின் பாதுகாப்பிற்குத்தான் அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 2023- 24-ஆம் ஆண்டில் பாதுகாப்பு சம்பந்தமான முதலீடுகளுக்கு ஏறத்தாழ 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதிலிருந்து இதைப் புரிந்து கொள்ளலாம். நடப்பு நிதியாண்டில் இந்தத் தொகையை மேலும் உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
ரயில் பாதுகாப்பு செயல் திறனின் குறியீடான ஒரு மில்லியன் ரயில் கிலோமீட்டருக்கு விபத்து எண்ணிக்கை 2023- 24 இல் 0.03 ஆகக் குறைந்துள்ளது, கடந்த 2000-01 இல் இந்த குறியீடு 0.65 ஆக இருந்தது. அதிநவீன வழித்தட பராமரிப்பு மற்றும் புதுப்பிக்கும் இயந்திரங்களைப் பயன்படுத்தி தண்டவாளங்களின் மேம்பட்ட பராமரிப்பு, பாதை குறைபாடுகளைக் கண்டறிவதில் மேன்மை, தண்டவாள விரிசல்களைத் தடுப்பது மற்றும் மனித தவறுகளைக் குறைக்க மேம்பட்ட தொழில்நுட்பம் உள்ளிட்ட கூடுதல் நடவடிக்கைகள் ஆகியவை இதற்குக் காரணம். கடந்த 2013- 14 இல் 700 ஆக இருந்த நவீன தண்டவாள பராமரிப்பு இயந்திரங்களின் பயன்பாடு தற்போது 1667 ஆக கணிசமாக அதிகரித்திருக்கிறது. ரயில்களின் சுமூகமான இயக்கத்திற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்களை விளைவிக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் முறியடிப்பதற்காக தொடர்ச்சியான ரோந்துப் பணிகள் நடைபெறுகின்றன.
நிலையான மற்றும் மேம்பட்ட பயன்களை பெறுவதற்காக தொழில்நுட்ப இடையீடுகளின் கலவையும், குறிப்பிட்ட பயிற்சியும் மேற்கொள்ளப்படுகின்றன. மூடுபனி பாதிப்புக்குள்ளான பகுதிகளை வழிநடத்த உதவும் ரயில் ஓட்டுநர்களுக்கு ஜி.பி.எஸ் அடிப்படையிலான மூடுபனி பாஸ் சாதனங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, இத்தகைய முயற்சிகளின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். 2014-15 ஆம் ஆண்டில் வெறும் 90 ஆக இருந்த எண்ணிக்கை இப்போது 21,742 ஆக உயர்ந்துள்ளது. ஓட்டுநர்களின் தயார்நிலையை அதிகரிக்க அனைத்து என்ஜின்களிலும் கண்காணிப்பு கட்டுப்பாட்டு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அகல வழித்தடங்களில் உள்ள 6,637 ரயில் நிலையங்களில், 6,575 நிலையங்களில் மேம்படுத்தப்பட்ட சிக்னல் அமைப்புமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இது மட்டுமல்லாமல், ஓட்டுநர்களின் திறன்களை மேம்படுத்த ரயில் ஓட்டுநர்களுக்கு இப்போது சிமுலேட்டர் அடிப்படையிலான பயிற்சி வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் முன்கள ஊழியர்கள் தீயணைப்பு மற்றும் தீயணைப்புக் கருவிகளைப் பயன்படுத்துவதில் பயிற்சி பெறுகிறார்கள். 2023- 24 இல் ஒட்டு மொத்தமாக சுமார் 6 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பல்வேறு வகையான பயிற்சிகளைப் பெற்றனர்.
மனித பாதுகாப்பு தவிர்த்து, வன உயிரினங்கள் மற்றும் கால்நடைகளைப் பாதுகாப்பதிலும் இந்திய ரயில்வே கவனம் செலுத்துகிறது. 2024-25 இல் 6,433 கிலோமீட்டர் தூரத்திற்கு வேலிகள் அமைக்கப்பட்டு கால்நடைகள் தண்டவாளங்களில் சிக்குவது தடுக்கப்படுகிறது. ஆகஸ்ட் 2024 வரை 1,396 கிலோமீட்டர் தூரத்திற்கான பணிகள் நிறைவடைந்துள்ளன.
மேலும், தடம் புரளுதல் மற்றும் பயணிகளுக்கு காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும் நோக்கத்துடன் மேம்பட்ட அம்சங்கள் பொருந்திய எல்.ஹெச்.பி பெட்டிகளுக்கு தற்போது ரயில்வே மாறி வருகிறது. விபத்தின் போது ஒரு பெட்டி, மற்றொரு பெட்டியின் மீது ஏறுவதைத் தவிர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட இந்த ரயில் பெட்டிகள், மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் பாதுகாப்பான செயல்பாட்டிற்காக கட்டமைக்கப்பட்டுள்ளன. இதன் தயாரிப்பு எண்ணிகையும் உயர்ந்துள்ளது. 2013-14 இல் தயாரிக்கப்பட்ட 2,467 பெட்டிகளை விட சுமார் இரண்டு மடங்கு அதிகமாக 2023-24 ஆம் ஆண்டில் 4,977 எல்.ஹெச்.பி பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்திய ரயில்வே, முன்பை விட பாதுகாப்பான பயணத்திற்கு வித்திடுகிறது.