கோவையில் பாரத் டெக்ஸ் 2025 நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு.
சென்னை
பாரத் டெக்ஸ் 2025-ஐ பிரபலப்படுத்துவதற்கான ஒரு ரோட்ஷோ கோவையில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது.
மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஃபைபர் ஜவுளிகள் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிகளின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் ஆதரவுடன் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில், மத்திய ஜவுளி அமைச்சகம் மற்றும் தமிழக அரசின் மூத்த அதிகாரிகள், தமிழ்நாட்டின் முன்னணி ஜவுளி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர்கள் உள்பட 450- க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஜவுளித்துறை செயலாளர் திருமதி ரச்னா ஷா, பாரத் டெக்ஸ் குறுகிய காலத்தில் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகளுக்கான உலகின் மிகப்பெரிய கண்காட்சியாக மாறியுள்ளது என்றும், ஜவுளித் துறையின் ஒட்டுமொத்த மதிப்பு சங்கிலியையும் உள்ளடக்கியது என்றும் கூறினார். இந்த நிகழ்ச்சியை பெரிய அளவில் நடத்த அரசு ஆதரவு அளிக்கும் என்று அவர் உறுதியளித்தார். பாரத் டெக்ஸ் 2025-ல் தமிழகம் பங்குதாரர் மாநிலமாக திகழ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஜவுளி அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு ராஜீவ் சக்சேனா தமது விளக்கக்காட்சியில், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பாரத் டெக்ஸின் முதல் பதிப்பின் மிகப்பெரிய வெற்றியைச் சுட்டிக்காட்டினார்.
பாரத் டெக்ஸ் 2025 கண்காட்சி, 5,000 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள், 6,000 வெளிநாடுகளைச் சேர்ந்த வாங்குபவர்கள், 1,20,000 வர்த்தக பார்வையாளர்கள் மற்றும் 60 க்கும் மேற்பட்ட அறிவுசார் அமர்வுகளை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அவர் கூறினார்.
இந்த நிகழ்வு உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளதாகவும், பாரத் டெக்ஸ் 2025-ல் அதிக எண்ணிக்கையில் பங்கேற்க கண்காட்சியாளர்கள் மற்றும் வாங்குபவர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். கண்காட்சி பகுதியின் பெரும்பகுதி அரங்குகளை நிர்மாணிப்பதற்காக ஏற்கனவே விற்கப்பட்டுள்ளதாகவும், பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள் தங்கள் இடத்தை முன்பதிவு செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக அரசின் தொழில்துறை செயலாளர் திரு வி.அருண் ராய், பாரத் டெக்ஸ் 2025-ல் பங்கேற்க தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.
பாரத் டெக்ஸ் ஏற்பாட்டுக்கான மையக் குழுவின் இணைத் தலைவரும், மேட்டெக்சில் நிறுவனத்தின் தலைவருமான திரு பத்ரேஷ் தோதியா, பண்ணையிலிருந்து இழை, இழையிலிருந்து தொழிற்சாலை, தொழிற்சாலையிலிருந்து வடிவமைப்பு, வடிவமைப்பிலிருந்து வெளிநாடு என்னும் தொலைநோக்கை பாரத் டெக்ஸ் கொண்டுள்ளதாக கூறினார். உலக அளவிலான மற்றும் தரத்திலான ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகளுக்கான கண்காட்சியின் அவசியத்தை இந்தியா எப்போதும் உணர்ந்து வருவதாகவும், பாரத் டெக்ஸ் அந்த தேவையை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த ஆண்டு பாரத் டெக்ஸ் 2025 சுமார் 2,20,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமையவுள்ளது. கண்காட்சியாளர்கள் ஃபைபர், நூல், துணிகள், ஆடைகள், ஒப்பனைகள் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிகள் போன்ற ஜவுளிகளின் முழு மதிப்பு சங்கிலியையும் காட்சிப்படுத்துவார்கள்.
தில்லியில் உள்ள பாரத் மண்டபம் மற்றும் ஐ.இ.எம்.எல்-லில் . மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் தீவிர ஆதரவுடன் அனைத்து ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்களும் இணைந்து பாரத் டெக்ஸ் 2025 நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.