வேவ்ஸ் உச்சி மாநாடு 2025.
நமது படைப்பாற்றலை உலகுக்கு உணர்த்துவது
அனுராக் சக்சேனா
புதிய கண்டுபிடிப்பு, அறிவுசார் சொத்து, தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவற்றில் மேற்கொண்ட இடைவிடாத முயற்சியில் கவனம் செலுத்தியதன் வெகுமதிகளை பல நூற்றாண்டுகளாக மேற்கத்திய நாடுகள் அறுவடை செய்துள்ளன. இந்த நாடுகள் தங்கள் கண்டுபிடிப்புகளை பணமாக்கியது மட்டுமின்றி, தங்கள் கருத்துகளை உலக அளவில் ஏற்றுமதி செய்து, தங்களைப் பொருளாதார அதிகார மையங்களாக நிலைநிறுத்திக் கொண்டன.
இதற்கு நேர்மாறாக, இந்தியா, சீனா போன்ற பொருளாதாரங்கள் வரலாற்று ரீதியாக உற்பத்தியிலும் சேவைகளிலும் தங்கள் வளர்ச்சியை நிலைநிறுத்தின - இரண்டும் மதிப்பு கூட்டல் தளத்தில் குறைந்த நிலையில் இருந்தன. இந்த அணுகுமுறை, தொழில்மயமாக்கல் வேலை உருவாக்கம் ஆகியவற்றுக்குப் பயனுள்ளதாக இருந்தாலும், புதிய கண்டுபிடிப்பு அல்லது அறிவுசார் சொத்து உருவாக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கவில்லை. இதனால் இந்த நாடுகள் மேம்பட்ட தொழில்நுட்பங்களை உருவாக்குபவையாக இல்லாமல் நுகர்வோர்களைக் கொண்டவையாக மாறின.
ஆனால், கடந்த தசாப்தத்தில் இந்தியாவின் உலகளாவிய நிலைப்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியா ஒரு புவிசார் அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது, பல்வேறு களங்களில் தனது பலத்தை நிலைநிறுத்தியுள்ளது. ராஜீய ரீதியாக, உலக அரங்கில் மிகவும் உறுதியான நிலைப்பாட்டை இந்தியா மேற்கொண்டுள்ளது. சர்வதேச விவகாரங்களில் தனது இறையாண்மையைப் பேணும் அதே வேளையில், முக்கிய சக்திகளுடன் உத்திசார் கூட்டாண்மைகளில் ஈடுபட்டுள்ளது. புவிசார் அரசியல் அரங்கில், இந்தியா தனது பாதுகாப்பு திறன்களை பலப்படுத்தியுள்ளது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை எதிர்த்து, குவாட் போன்ற முயற்சிகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
"இந்தியாவில் உருவாக்குங்கள்" என்பதில் இந்தியாவின் தற்போதைய கவனம் சரியான நேரத்திலும் உத்திபூர்வமாகவும் ஏன் முக்கியமானது என்பதை இந்தப் புதிய உறுதிப்பாடு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பதிய கண்டுபிடிப்புக் கலாச்சாரத்தை வளர்ப்பதன் மூலமும், உள்நாட்டுத் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியை ஆதரிப்பதன் மூலமும், பொருளாதார ரீதியாகவும் அடுத்த நூற்றாண்டில் ஆதிக்கம் செலுத்த இந்தியா தன்னை தயார்படுத்திக் கொள்கிறது. உருவாக்கத்தில் கவனம் செலுத்துவது, பொருளாதார ரீதியாக மதிப்புத் தொடரை உயர்த்தவும், அறிவுசார் சொத்துகளில் அதிக வருவாயை ஈட்டவும், வெளிநாட்டுத் தொழில்நுட்பங்களை சார்ந்திருப்பதைக் குறைக்கவும் இந்தியாவுக்கு உதவும். மென்பொருள் சக்தியைப் பொறுத்தவரை, ஊடகம், பொழுதுபோக்கு போன்ற துறைகளில் முன்னணியில் இருப்பது, சிதைந்த மேற்கத்திய சித்தரிப்புக்கு தொடர்ந்து எதிர்வினையாற்றுவதற்குப் பதிலாக, தனது சொந்த கதையாடலை வடிவமைக்க இந்தியாவை அனுமதிக்கும்.
"நாம் ஒன்றிணைந்து 'இந்தியாவில் உருவாக்குங்கள்' இயக்கத்தைத் தொடங்குவோம்" என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தபோது, அதன் இரண்டாவது மற்றும் மூன்றாம் நிலை விளைவுகளை, குறிப்பாக கதை-திருத்தம் மற்றும் நமது நாகரிக சிந்தனைகளை உலக அளவில் ஏற்றுமதி செய்வதில் ஏற்படும் தாக்கங்களை எல்லோரும் புரிந்து கொள்ளவில்லை. ஈஸ்ட்மேன் வண்ணம் மற்றும் வினைல் பதிவுகளின் "தொழில்நுட்பங்கள்" அமெரிக்கா அதன் ஹீரோக்களையும் ராக்ஸ்டார்களையும் பிரபலப்படுத்த உதவியது. நமது எக்ஸ்ஆர் மற்றும் கேமிங் சகாப்தம் இந்தியாவைப் பிரபலப்படுத்த உதவும்.
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சமீபத்தில் உலக ஒலி ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடு (வேவ்ஸ்) 2025-ன் கீழ் 'இந்தியாவில் உருவாக்குங்கள் சவாலை' அறிவித்தது; இது நமது ஒலி, ஒளி, கேமிங், காமிக்ஸ் (ஏவிஜிசி) துறையின் எதிர்காலத்தை உலகிற்கு காண்பிக்கும் முதல் வகையான நிகழ்வு. இந்த பரந்த-தள சவால் என்பது 25 வகையான உள்ளடக்கம் மற்றும் விளையாட்டுகளில் நமது திறமைகளில் சிறந்ததைக் காட்டுகிறது. இந்தியாவுக்கு இந்த வெளிப்படையான கொண்டாட்டங்கள் அதிகம் தேவை. நமது படைப்பாற்றலையும், லட்சியத்தையும் உலகம் காண வேண்டிய நேரம் இது.
கட்டுரையாளர்: அனுராக் சக்சேனா,
மத்திய அரசின் தேசிய சுற்றுலா ஆலோசனைக் கவுன்சில்
நியமன உறுப்பினர், வாரிய உறுப்பினர், பத்திரிகையாளர்