சீஷா மூலம் வயநாட்டில்
1000 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை பால் தினகரன் வழங்கினார்.
சென்னை :
டாக்டர் பால் தினகரன் அவர்களால் தொடங்கப்பட்ட சீஷா தொண்டு நிறுவனம் இந்தியா முழுவதும் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்து வருகிறது.தற்போது கேரளாவில் பல்வேறு இடங்கள் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சீஷா நிறுவனர் டாக்டர் பால் தினகரன் அவர்களின் உடனடி உத்தரவின்படியும், டாக்டர்.ஷில்பா சாமுவேல் தினகரன் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், அறங்காவலர்கள் டாக்டர். ஈஸ்வரதாஸ், டாக்டர்.சாமுவேல் தாமஸ் அவர்களின் ஆலோசனைப்படியும் சீஷா பேரிடர் மீட்பு குழுவினர் கேரளாவின் வயநாட்டு பகுதிக்கு உடனடியாக விரைந்தனர்.
அத்தியாவசிய நிவாரணப் பொருட்களான போர்வைகள், லுங்கிகள், நைட்டிகள், துண்டுகள், குளியல் சோப்புகள், துணி சோப்புகள், டூத் பிரஷ்கள், டூத் பேஸ்ட்டுகள், லைட்டர்கள், மெழுகுவர்த்திகள், பிரட் பாக்கெட்டுகள், ஜாம் பாக்கெட்டுகள், பிஸ்கட்டுகள், சானிட்டரி நாப்கின்ஸ், தண்ணீர் பாட்டில்கள், அத்தியாவசிய மருந்து பொருட்கள் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நிவாரணப் பொருட்களை வயநாடு மாவட்டம், கல்பெட்டா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு சித்திக் அவர்கள் மூலம் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட
ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்கினார்கள்.
குறிப்பாக வயநாடு முகாமில் தங்கியுள்ள மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், முதியோர்கள் ,ஏனைய சிறப்பு குழந்தைகள் மற்றும் மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினார்கள்.
நிவாரணப் பணிகளை முன்னதாக காருண்யா பல்கலைக்கழக
துணை வேந்தர் முனைவர் பிரின்ஸ் அருள்ராஜ் அவர்களும் , இணை துணை வேந்தர் முனைவர் எலைஜா பிளஸ்சிங் அவர்களும் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
காருண்யா மருத்துவமனை இயக்குநர் டாக்டர் சாமுவேல் தாமஸ் தலைமை தாங்கினார். சீஷா தலைமை செயல் அலுவலர் மோசஸ் பால்மர் முன்னிலை வகித்தார்.
மேலும் சீஷா பேரிடர் மீட்பு குழுவினர் சார்லஸ், நீல் , பிரான்சிஸ் ,சாலமன், மணிவண்ணன் ,
ஜோசியா, ரூபன், அருண், செந்தில் மற்றும் சைமன் ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியா முழுவதும் வறுமையில் வாடும் மக்களை நாளுக்கு நாள் ஆதரித்து வரும் சீஷா தொண்டு நிறுவனம் கேரளாவில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உதவிக்கரம் நீட்டி அனைவரின் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
சீஷாவுடன் இணைந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட இயேசு அழைக்கிறார் ஊழியங்கள்,
கோயம்புத்தூர் போத்திஸ் ஜவுளி நிறுவனம் ,
காருண்யா மருத்துவமனை மற்றும் காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு வயநாட்டு மக்கள் சார்பாக கல்பெட்டா தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் மாண்புமிகு சித்திக் நன்றி கூறினார்.
கண்ணீரில் தத்தளிக்கும் கேரளா வயநாட்டுப் பகுதி மக்களுக்கு தொடர்ந்து இரண்டு நாட்களாக சீஷா பேரிடர் மீட்பு குழுவினர் ஆறுதல் கூறியும் வருகின்றனர்.