தேசியக்கொடியை ஏற்றி வைத்தார் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன்
நாட்டின் 76வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அனைத்து இல்லங்களிலும் தேசியக்கொடியை ஏற்ற வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதை ஏற்று அரசு, தனியார் நிறுவனங்கள், பொதுமக்கள் தங்கள் அலுவலகம் மற்றும் இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்றி தங்களது தேசப்பற்றினை வெளிப்படுத்தினர். சுதந்திர தினமான இன்று பிரதமர் நரேந்திரமோடி, செங்கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களிடையே உரையாற்றினார். தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் தங்களது இல்லங்களில் தேசியக்கொடியை ஏற்றி வைத்தனர். இதேபோன்று மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் புதுதில்லியில் உள்ள தனது இல்லத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், ’பட்டொளி வீசி பறக்கும் நம் பாரதத்தின் தேசியக் கொடியை எனது இல்லத்தில் ஏற்றி வந்தே மாதரம் என முழங்கி நம் தாய் மண்ணிற்கும், சுதந்திர தியாகிகளுக்கும் மரியாதை செலுத்தினேன். ஜெய்ஹிந்த்!! என பதிவிட்டுள்ளார்.