உணவு பாதுகாப்பு- போட்டித் தன்மையுடன் நல்வாழ்வை இணைத்தல்
நாட்டிலுள்ள எந்த நியாய விலைக் கடைகளில் இருந்தும் மானிய விலையில் தானியங்களை வழங்கி, 80 கோடி இந்தியர்களுக்கு முன்எப்போதும் இல்லாத வகையில் உணவு பாதுகாப்பில் அதிகாரமளிக்கும் அமைதியான புரட்சி நாட்டில் பெருகி வருகிறது. மோடி அரசின் நல்வாழ்வு மற்றும் ஏழைகள் அணுகக்கூடிய இது போன்ற முயற்சிகள் புதிய உச்சத்தை அடைவதுடன் பலர் நினைத்துக் கூட பார்த்திராத வகையில் மிகப்பெரிய மாற்றத்திற்கான தாக்கத்திற்கும் அடித்தளமிடுகிறது.
ஒரே தேசம், ஒரே குடும்ப அட்டை திட்டம் என்பது நலிவடைந்தவர்களுக்கு ஆதரவளித்து, ஊட்டச்சத்து வழங்கும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நலத்திட்டம் மட்டுமல்ல. இது நியாய விலைக் கடைகளுக்குப் போட்டியை ஏற்படுத்துவதோடு புலம்பெயர்ந்தோர் எந்த நகரத்திலிருந்தும் மானிய விலையில் தானியங்களை வாங்க வழிவகை செய்வதால் அவர்கள் சேமித்த பணத்தில் மற்ற பொருட்களை வாங்க முடிவதுடன் பொருளாதார ஊக்கியாகவும் இது உள்ளது.
இந்தியாவில் ஆறு கோடி மக்கள் வேறு மாநிலங்களுக்கும், பருவ காலங்களின் போது எட்டு கோடி மக்கள் தங்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இடம்பெயர்கிறார்கள். ஒடிசா, பிகார், மேற்குவங்கம், உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஒரே தேசம், ஒரே குடும்ப அட்டை திட்டம் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டத்தினால் தொழிலாளரும், அவரது குடும்பமும் அதிக பயன்பெறுகிறார்கள். தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அதிக மானியத்துடன் தானியங்கள் வழங்கப்படுவதுடன் பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தின் கீழ் உணவுப் பொருட்களும் இலவசமாக வழங்கப்படுவதால் அவர்களது சேமிப்பு பெருவாரியாக அதிகரிக்கிறது.
இந்திய தொழிலாளர்களுக்கு இத்திட்டம் தன்னிறைவு அளிப்பதால் தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் தொழில்நுட்பங்களால் உந்தப்பட்ட பிரதமரின் அமைப்புமுறை சீர்திருத்தத்திலும் இது அங்கம் வகிக்கிறது.
ஐந்து லட்சம் நியாய விலைக் கடைகளிடையே ஏற்படும் போட்டி, நாட்டிலுள்ள வர்த்தக கலாச்சாரத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் அங்கம் வகிப்பதோடு மேம்பட்ட தரத்திலான பொருட்களையும் சேவைகளையும் மக்கள் பெறவும் உதவிகரமாக இருக்கும். ஏராளமான வேலை வாய்ப்புகளையும் இது உருவாக்கும்.
கடந்த ஆகஸ்ட் 2019-ஆம் ஆண்டு திட்டம் தொடங்கப்பட்டது முதல் 80 கோடி பரிமாற்றங்கள் பதிவாகியுள்ளன. இவற்றுள் 69 கோடி பரிமாற்றங்கள் ஏப்ரல் 2020-க்கு பிறகு கொவிட் காலகட்டத்தில் ஏற்பட்டுள்ளது. தற்போது நாட்டில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. 75-வது சுதந்திர தினத்தன்று அனைவருக்கும் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை வழங்குவதை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இந்த வாய்ப்பை நாம் அனைவரும் கொண்டாடுவோம்.