போடி பகுதியில் காட்டெருமை தாக்கி கூலி தொழிலாளி பலி May 20, 2020 • M.SENTHIL தேனி மாவட்டம் போடி அருகே கேரளா எல்லைப் பகுதியில் மலை கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் தோட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இப்பகுதியிலுள்ள கொழுக்குமலை எஸ்டேட்டில் சங்கரன்கோவில் அருகே உள்ள குஞ்சாம் பட்டியைச் சேர்ந்த லட்சுமணபாண்டி (46) மற்றும் தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியை சேர்ந்த சேகர் (52) ஆகியோர் கூலித் தொழிலாளி தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். சம்பவத்தன்று இவர்கள் இருவரும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக குரங்கணி பகுதிக்கு வந்தனர். பொருட்களை வாங்கிய பின்னர் இவர்கள் மறுபடியும் எஸ்டேட்பகுதிக்கு நடந்து சென்றனர். அப்போது குரங்கணி அருகே உள்ள ஒத்தமரம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக அங்கு வந்த காட்டெருமை இவர்களை முட்டி தூக்கி எறிந்ததாக கூறப்படுகிறது.இதில் பலத்த காயமடைந்த லட்சுமணபாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லேசான காயங்களுடன் உயிர் பிழைத்த சேகர் அங்கிருந்து தப்பிச் சென்று குரங்கணி பகுதியிலுள்ள பொதுமக்களிடம் தகவல் தெரிவித்தார். பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் டோலி மூலம் லட்சுமணபாண்டி உடலை மீட்டு கொண்டு வந்தனர். லேசான காயங்களுடன் தப்பித்த சேகருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காட்டு எருமை முட்டி கூலித்தொழிலாளி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்ட செய்திகளுக்காக க.சின்னதாஸ்