தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலை கடைகளில் பணியாற்றுகின்ற 30,600 ஊழியர்களுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாமை திருவாரூரில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் துவங்கி வைத்தார் .
திருவாரூர் மாவட்டத்தில் பணிபுரியும் நியாய விலை கடை ஊழியர்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாமை திருவாரூர் அருகே குளிக்கரையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவித்ததாவது...
இந்த மாதத்திற்கான பொருட்கள் 88% நியாய விலை கடைகளுக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது .விரைவில் மீதமுள்ள பொருட்கள் சேர்க்கப்படும். அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றி வாங்கிக்கொள்ளவேண்டும். இன்றைய தினம் தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலை கடைகளில் பணியாற்றுகின்ற 30,600 ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகமானது அந்தந்தப் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம் செய்யப்படவுள்ளது, இதனை இன்றைய தினம் திருவாரூரில் துவங்கி வைத்திருக்கிறோம் .
கோயம்பேடு தொற்று விவகாரத்தில் தமிழக அரசு சரியாக செயல்படவில்லை என ஸ்டாலின் தெரிவித்த குற்றச்சாட்டிற்கு....
கோயம்பேடு சந்தை மாற்றுவதற்காக பலமுறை முதலமைச்சர் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார் .வியாபாரிகள் தாங்கள் நஷ்டம் அடைய வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதால் மாற்று இடத்திற்கு செல்ல மறுத்து வந்தனர். நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை உயிர் முக்கியம் என முதலமைச்சர் திரும்பத் திரும்ப கூறி வந்தார் .நோய்களிலிருந்து விடுபட வேண்டுமென்றால் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார் .
கொரோனா நோயின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம், ஆனால் அதன் வீரியம் குறைவாக உள்ளது. தமிழகத்தில் இறப்பு விகிதம் 0.67 சதவீதமாக உள்ளது, இதில் மக்களுக்கு அச்ச உணர்வு தேவை இல்லை ஆனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் .தமிழகத்தில் எந்த ரேஷன் கடையிலும் அரிசியின் அளவு குறைக்கப்படவில்லை, இதுகுறித்து ஏற்கனவே ஒரு தனியார் தொலைக்காட்சியில் தவறான செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அரிசி அளவு குறித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது ,அதன்படி அனைத்து நியாயவிலை கடைகளில் அரிசி வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் தட்டுப்பாடு என்பதே கிடையாது அனைத்து பொருள்களும் தட்டுப்பாடின்றி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் ,சுகாதாரத்துறை துணை இயக்குனர் விஜயகுமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்.க.பாலா