கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மருந்தகங்கள் சங்க
உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் வெ.அன்புச்செல்வன்,
அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன்,இஆப., அவர்கள்
தெரிவித்ததாவது.
கடலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான மருந்து பொருட்கள் தங்கு தடையின்றி
மருந்தகங்கள் வழங்கிட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. வெளி மாநிலம் மற்றும்
மாவட்டங்களிலிருந்து மருந்து பொருட்களை எடுத்து வருவது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பொதுமக்கள் வெளியே வருவதற்கு
அனுமதி சீட்டு வழங்கப்படுவது போல் மருந்துப்பொருட்கள் உதவியாளர்கள் சென்று வர அனுமதி சீட்டு
வழங்க ஏற்பாடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கிராமப்புறங்களில் உள்ள மருந்தகங்களின்
ஊழியர்கள் அப்பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களை தொடர்பு கொண்டு அனுமதி பெறலாம்.
மக்களுக்கு தேவையான மருந்துபொருட்களை இலாப நோக்கில் இல்லாமல் சேவை நோக்கில்
மருந்தகங்கள் விற்பனை செய்ய வேண்டும். மருந்து பொருட்கள் அத்தியாவசிய தேவை என்பதால் அதனை
பொதுமக்களுக்கு முறையாக வழங்கிட வேண்டும். மேலும் மருந்தகங்களில் மருந்து பொருட்களை வாங்க
வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்திட வேண்டும் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஆர்.ராஜகிருபாகரன், கடலூர் வருவாய்
கோட்டாட்சியர் திரு.ஜெகதீஸ்வரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது ) திரு.நாராயணன்,
இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள் ) மரு.ரமேஷ்பாபு, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள் ) மரு.கீதா,
நகராட்சி ஆணையாளர் திரு.ராமமூர்த்தி மற்றும் மருந்தகங்கள் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.