தாராபுரம் அருகே விவசாயக் கூலி வேலைக்காக வந்திருந்த பெண்கள் குழந்தைகள் உட்பட 29 பேர் உணவுக்கு வழியின்றி திண்டுக்கல் நோக்கி நடைபயணமாக சென்றபோது வருவாய்த் துறையினர் மீட்பு, அனைவரையும் தனிமைப்படுத்தி விசாரணை.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள பூளவாடி சாலை வெங்கிட்டிபாளையம் அருகே மூட்டை முடிச்சுகளுடன் 30க்கும் மேற்பட்டோர் நடந்து வருவதாக தாராபுரம் தாசில்தாருக்கு கிராம மக்கள் தகவல் அளித்தனர் இதனைத்தொடர்ந்து பூளவாடி சாலை பிரிவு அருகே நடந்துவந்து கொண்டிருந்தவர்களை வழிமறித்த தாசில்தார் கனகராஜன் தலைமையிலான வருவாய் மற்றும் காவல்துறையினர்அவர்களிடம் நடத்திய விசாரணையில்
தாராபுரத்தை அடுத்த குண்டடம் மேட்டுக்கடை பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடை நடைபெற்று வருகிறது அங்கு தினக்கூலி பணியாளர்களாக வேலை செய்ய திண்டுக்கல் மாவட்டம் செங்குறிச்சி கிராமத்தில் இருந்து விவசாயக் கூலித் தொழிலாளர்கள் மேட்டுக்கடை வந்து தங்கி வேலை செய்து வந்ததாகவும், விவசாய பணிகள் முடிந்த நிலையில் கெரானா வைரஸ் பரவலை தடுக்க அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக விவசாய வேலைகளும் இன்றி சொந்த ஊருக்கு செல்லவும் முடியாமல் கையில் இருக்கும் காசுகளை வைத்து தவித்து வந்ததாகவும், போக்குவரத்துக்கு எந்த வசதியும் இல்லாத நிலையில் நடந்தே தங்களது சொந்த ஊருக்குச் செல்ல முடிவு செய்து நடந்து வருவதும் தெரியவந்தது.
உண்ண உணவின்றி நடந்து வந்த 9 ஆண்கள், 13 பெண்கள் ,7 குழந்தைகள் உட்பட 29 பேரையும் தனியாக ஒரு லாரியில் ஏற்றி தாராபுரத்தில் உள்ள பள்ளி வளாகம் ஒன்றில் தங்க வைத்துள்ள வருவாய்த்துறையினர் அவர்களுக்கு தேவையான உணவு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுத்திருப்பதுடன் வட்டாரஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி தேன்மொழி தலைமையில் அனைவருக்கும் கெரானா தொற்று உள்ளதா என பரிசீலனை செய்த பின் மாவட்ட நிர்வாகத்தின் முடிவின்படி அவர்களது சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.